The cat, partridge and the hare story in Tamil
கௌதாரி ஒன்று பெரிய புதரில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அதற்கு மிகவும் பசி எடுத்தது. அதனால் அது இரை தேடி மிக தூரமாக பறந்து சென்றது. அங்கு பச்சை பசேல் என்று வயல் ஒன்றனைக் கண்டது. வயலில் உள்ள நெற்கதிர்கள் வயிறு நிறையத் தின்றது. அங்கேயே அது தங்கிவிட்டது.நீண்ட நாளாகியும் கௌதாரி, புதருக்கு திரும்பவில்லை. எனவே, கௌதாரியின் புதரில் வெள்ளை முயல் ஒன்று வாழத் தொடங்கியது. அறுவடைக்காலம் முடிந்ததும், கௌதாரி தன் இருப்பிடத்திற்குத் திரும்பியது. அங்கு முயல் இருப்பதனைப் பார்த்து கோபம் கொண்டது. முயலிடம், 'இது என்னுடைய இடம், நீ வெளியே போ' என்று கடுமையாக கூறியது. 'நான் இந்த இடத்தில் பல நாட்களாக இருக்கிறேன். இந்த இடம் எனக்கே சொந்தம்' என்று கூறியது முயல்.
புதர் யாருக்கு உரியது என்பதனை முடிவு செய்ய, நாம் ஒரு நடுவரை தேர்ந்தெடுப்போம். அங்கு ஒரு வயதான பூனை ஒன்றனைக் கண்டன. அப்பூனை, உண்ட மயக்கத்தில் கண்மூடி உட்கார்ந்து இருந்தது. இவரிடம் கேட்போம், நமக்கு நீதி கிடைக்கும் என்று கௌதாரியும் முயலும் பேசிக் கொண்டன.
இருவரும் பேசிக் கொண்டதனைப் பூனை ஒட்டு கேட்டது; தேடாமலேயே உணவு கிடைத்துவிட்டது என்று மகிழ்ந்தது; கண்களை மூடி தியானம் செய்வதுப்போல முணுமுணுத்தது. இதனைப் பார்த்த கௌதாரிக்கும் முயலுக்கும் பூனையிடம் நம்பிக்கை ஏற்பட்டது. இரண்டும் பூனையின் அருகே சென்று வணக்கம் கூறின. கண் விழித்த பூனை, 'நீங்கள் யார் ? உங்களுக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டது.
இரண்டும், நடந்ததனைக் கூறி நீதி கேட்டன. ஒரு திட்டம் தீட்டியது. வஞ்சக எண்ணம் கொண்ட பூனை, 'எனக்கு வயதாகிவிட்டது; காது எனக்கு சரியாகக் கேட்கவில்லை; சற்று அருகில் வந்து பேசினால் எனக்கு புரியும்' என்று கூறியது.
கௌதாரியும் முயலும், பூனையின் பக்கத்தில் சென்றன. பூனை, இரண்டையும் கவ்விப் பிடிக்க முயன்றது. ஆபத்தை உணர்ந்த முயல், அதனிடமிருந்து தப்பி மிக வேகமாக ஓடியது. கௌதாரியும் கண் இமைக்கும் நொடியில் சட்டென்று பறந்து தப்பித்தது.
'நல்லவேளை, தப்பிப் பிழைத்தோம்; இனிச் சண்டை இல்லாமல் ஒன்றுபட்டு மகிழ்ச்சியாய் வாழ்வோம்' என்று அவை இரண்டும் முடிவெடுத்தன.